
எதிர்காலத்தில் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைப்புகள் பொருத்தப்பட்டால் மட்டுமே அந்த பேருந்துகளுக்கு சாலை அனுமதி வழங்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் பி.டி.விதாரண தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது சாலை அனுமதிகளைப் பெறும்போது பேருந்து உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளன என்றும், இதில் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்துவது அடங்கவில்லை என்றாலும், விரைவில் அதை நிபந்தனைகளின் தொகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இது தனியார் பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைப்பதோடு, பேருந்திலும் அதில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.