தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான விசேட போதை ஒழிப்பு பேரணி இன்று (23) தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிகா தமயந்தி தலைமையில் கல்முனையில் நடைபெற்றது.
“போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பேரணி, சாய்ந்தமருது எல்லைக்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
பேரணியில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். றஸாட், இளைஞர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகள் மற்றும் கோஷங்களை ஏந்தியவாறு கல்முனை நகர் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
பின்னர், கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் பேரணி நிறைவடைந்தது. போதைப்பொருள் பாவனையால் சமூகத்திற்கும் இளைஞர் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைப்பதோடு, போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.
இந்நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
![]()
