Lanka4 ஊடகத்தின் அனுசரணையுடன், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 31ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “Clean Sri Lanka – நாட்டை மாற்றும் சக்தி உங்களிடமே” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று (17) நடைபெற்றது.
காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், தொழிற்பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி, வைத்தியசாலை ஊழியர்கள், நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்ட Clean Sri Lanka அமைப்பின் தலைவர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினர்.
வைத்தியசாலை வளாகத்தை தூய்மையாகவும் சுகாதாரமானதாகவும் பேணுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவித்தல் ஆகியவற்றை பிரதான நோக்கங்களாகக் கொண்டு இந்த சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்கள் முதல் வைத்தியசாலை ஊழியர்கள் வரை பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த சமூகப் பணி, “சுத்தமான இலங்கை – பொறுப்பான சமூகத்தின் அடையாளம்” என்ற செய்தியை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்தது.
![]()
