கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகத்தின் கடுமையான அலட்சியப் போக்கின் காரணமாக, 52 வயதுடைய மாகாண சபை கள அலுவலர் ஒருவர் தனது வேலையை இழந்து, பெரும் போராட்டத்திற்குப் பின் 43 நாட்கள் சம்பளப் பிடித்தத்துடன் மீள வேலை பெற்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் பெற்ற இந்த அலுவலர், ஏப்ரல் மாதம் தனது தந்தையின் அவசர தீவிர சிகிச்சை (ICU) நிமித்தம் பணிக்குச் செல்ல முடியாமல் போயுள்ளது.
இதுகுறித்த அவசர விடுமுறைத் தகவலைத் தனது உயரதிகாரிக்குத் தெரிவிக்க, அவர் கிளிநொச்சி பிரதம தபால் அலுவலகம் மூலம் முறைப்படி ‘டெலிமெயில்’ (Telemail) செய்துள்ளார்.
எனினும், தபால் நிலையத்தினர் அந்த டெலிமெயிலை உரிய நேரத்திற்கு அனுப்பாமல் அடியோடு மறந்துள்ளனர். இதன் விளைவாக, விடுமுறை அறிவிக்காமல் பணிக்கு சமூகமளிக்கவில்லை எனக் கூறி அந்த அலுவலருக்கு வேலை நீக்கக் (பதவி வெறிதாக்கல்) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தபால் நிலையத்தின் இந்தத் தவற்றால் அவர் 43 நாட்கள் வேலையிழந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இறுதியில், தபால் துறையின் தவற்றை நிரூபித்து, பெரும் போராட்டத்திற்குப் மத்தியில் எச்சரிக்கைக் கடிதத்துடனும், 43 நாட்களுக்கான சம்பளப் பிடித்தத்துடனும் அவர் மீண்டும் பணியில் இணைந்துள்ளார்.
தபால் துறையின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் அகம்பாவமான போக்கிற்கு எதிராக மக்கள் மத்தியிலும், அரச ஊழியர்கள் மத்தியிலும் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.
![]()
