ரஷ்யாவின் உஃபா (Ufa) நகரில் உள்ள State Medical University-யில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அறிக்கையின்படி, பதின்ம வயது இளைஞர் ஒருவர் கத்தியுடன் மாணவர் விடுதியின் விளையாட்டு அரங்குக்குள் நுழைந்து, பல மாணவர்களை குத்தியுள்ளார். இதில் நான்கு இந்திய மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “உஃபாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. கசான் நகரிலிருந்து தூதரக அதிகாரிகள் உடனடியாக உஃபாவுக்கு சென்று மாணவர்களுக்கு உதவி செய்ய உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யும் போது எதிர்ப்பு தெரிவித்ததால், இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாக ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதல்தாரி தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தகவல்களின் படி, தாக்குதலில் இரண்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதில் ஒருவர் 15 வயது இளைஞர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு முன்பு, பல இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.
![]()
