பிரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 120 டொலர்களைத் தொட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கின் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நம்பியிருக்கும் ஆசிய பசிபிக் பிராந்தியம் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கி பிராந்தியத்தின் வளர்ச்சி முன்னறிவிப்பை 5.1 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. இப்பிராந்தியத்தின் பணவீக்க மதிப்பீடு 3.6 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் தொழிற்சாலை ஊழியர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து வருவதுடன், போக்குவரத்துத் துறை ஊழியர்களின் வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
வானூர்தி எரிபொருள் தட்டுப்பாட்டினால் விமான நிறுவனங்கள் எரிபொருள் மேலதிக கட்டணங்களை அதிகரித்துள்ளதுடன், பல வானூர்தி சேவைகளையும் இரத்து செய்துள்ளன.
இதேவேளை, எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்த பென்னி வொங், டீசல் மற்றும் வானூர்தி எரிபொருள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா தனது பங்கிற்கு நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் முக்கியமான தாதுக்களை சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பிராந்திய எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சியோலில் இருக்கும் பென்னி வொங், உலகின் மிகப்பெரிய வானூர்தி எரிபொருள் ஏற்றுமதி நாடான தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் சோ ஹியூனைச் சந்தித்து எரிசக்தி விநியோகம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
![]()
