பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை மார்ச் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1ஆம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. என்.டி.ஏ கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, என்.டி.ஏ கூட்டணியின் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மதுரையில் உள்ள மண்டேலா நகரில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார்.
மேலும், பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் மதுரை வருகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடி வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகை தர உள்ளார். இந்த தகவலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “ஒரு நாள் தாமதமாக மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி மதுரை வரவுள்ளார். மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்க இருக்கிறார். இதை திருவிழாபோல நடத்த உள்ளோம். கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.” என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
![]()
