இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவக்கார (Soap) உற்பத்திகளுக்கான கட்டாயப் பெயரிடல் மற்றும் தரக் கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய ஒழுங்குவிதிகள் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியசாலையாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, உற்பத்தியின் பெயர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அல்லது ஏதேனும் இரண்டு மொழிகளில் தடித்த எழுத்துக்களில் பாக்கெட்டின் பிரதான பக்கத்தில் அச்சிடப்பட வேண்டும்.
மூன்றாவது மொழி ஏதேனும் ஒரு பக்கத்தில் இடம்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சவக்காரத்தில் உள்ள மொத்தக் கொழுப்பு உள்ளடக்கம் சதவீத அடிப்படையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
இந்த விபரங்கள் நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியும் வகையில், 2 மில்லிமீற்றருக்குக் குறையாத அளவில் தடித்த எழுத்துக்களில் அமைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டவிதிகள் குழந்தை சவக்காரம் , குளியல் சவக்காரம், சவர சவக்காரம், கார்போலிக் சவக்காரம், சலவை சவக்காரம் மற்றும் மென் சவக்காரம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் அடுத்த ஆண்டு, அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
![]()
