முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான குஞ்சுக்கால் வயல்வெளிகளை ஆக்கிரமித்து, தென் இலங்கைப் பிரதேசத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தினால் உப்பளம் அமைக்கும் பணி மேற்கொள்ள தொடர்சியாக முயற்சிக்கப்பட்டு வருகின்றது
இந்த முயற்சி குறித்து முன்பே பல தரப்பினரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், நேற்றுமுன்தினம் வவுனியாவில் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட விவசாய அமைச்சர் லால்காந்த இந்த உப்பளம் அமைக்கும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபடமாட்டாது என உறுதியளித்தார் .
எனினும், அதனை மீறியும் நேற்றுகுறித்த நிறுவனத்தினால் மீண்டும் உப்பளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த உப்பளம் அமைக்கும் முயற்சி தொடர்பாக நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுசெயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அப்பகுதிக்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு காணி உரிமையாளர்களான கொக்குதொடுவாய் தமிழ் மக்களோடும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இப்பகுதியில் , உப்பளம் அமைக்கும் வேலைகளுக்காக தங்கி நிற்கும் மணலாறு ஜனகபுர பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் முரண்பாடான நிலைமையை உருவாக்கி, தமக்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பாரிய நீரிறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி கொக்கிளாய் கடல் நீரேரியிலிருந்து கால்வாய் மூலமாக நீரை உப்பள வயல்களுக்கு பாய்ச்சும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
போருக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த வயல்நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளை கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் எனும் பேரில் வனஜீவராசிகள் திணைகளம் எல்லைக்கற்களை இட்டு பயிர் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என காணி உரிமையாளர்களான கொக்குதொடுவாய் மக்களுக்கு தடை ஏற்படுத்தி வந்தனர். இதனால் இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாத நிலை காணப்பட்டது, ஆனால் தற்போது அதே வனஜீவராசிகள் திணைக்களத்தால் சரணாலயம் என ஒதுக்கப்பட்ட இடத்திலேயே இந்த உப்பளம் அமைக்கப்பட்டு வருகிறது, ஆனால் வனஜீவராசிகள் திணைக்களம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மகாவலி அதிகார சபையின் ஆதரவோடு 48 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை ஆக்கிரமித்து இந்த உப்பளம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து, விவசாய நிலங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கொக்குத்தொடுவாய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![]()
