வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் தனது இளைய மகளை வாரிசாக முன்னிலைப்படுத்தி வருகிறார் என தென் கொரியாவின் தேசிய உளவுத்துறை (NIS) தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிம் குடும்ப ஆட்சி நான்காவது தலைமுறையாக நீடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கிம் ஜோங் உனின் மகள், கிம் ஜூ ஏ என அழைக்கப்படுகிறார் என்று நம்பப்படுகிறது. வயது சுமார் 13. 2022 நவம்பரில் நடந்த நீண்ட தூர ஏவுகணை சோதனையில் முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார்.

அதன் பிறகு, பல்வேறு இராணுவ அணிவகுப்புகள், ஆயுத சோதனைகள், தொழிற்சாலை பார்வைகள், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நடந்த உச்சி மாநாடு போன்ற முக்கிய நிகழ்வுகளில் தந்தையுடன் கலந்து கொண்டார்.
வடகொரிய ஊடகங்கள் அவரை “அன்பான குழந்தை” மற்றும் “வழிகாட்டும் சிறந்த நபர்” என்று குறிப்பிடுகின்றன. இது, வழக்கமாக தலைவர்களுக்கும் வாரிசுகளுக்கும் மட்டுமே வழங்கப்படும் பட்டம்.
“முன்பு அவர் வாரிசு பயிற்சியில் உள்ளார் என்று கூறினோம். இப்போது ‘successor-designate stage’ என்கிறோம். இது முக்கியமான மாற்றம்” என்று NIS தெரிவித்துள்ளது.
இந்த மாதம் நடைபெறவுள்ள Workers’ Party Congress-ல், கிம் ஜோங் உன் தனது மகளை அதிகாரப்பூர்வமாக வாரிசாக அறிவிக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சிலர், அவர் கட்சியின் இரண்டாவது உயர்ந்த பதவியான “First Secretary” ஆக நியமிக்கப்படலாம் எனவும் கூறுகின்றனர்.
வடகொரியாவில் இதுவரை ஆட்சியை ஆண்கள் மட்டுமே மேற்கொண்டுள்ளனர். கிம் ஜூ ஏ வாரிசாக அறிவிக்கப்பட்டால், அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக இருக்கும்.
![]()
