இலங்கையில் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று ஒரு வருடகாலம் பூர்த்தியடைந்திருக்கும் பின்னணியில், இலங்கையின் சமகால நிலவரம் தொடர்பான சிறப்பு இடையீட்டு விவாதமொன்று வியாழக்கிழமை (26) நோர்வே பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது

இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட நோர்வே பாராளுமன்ற தொழிற்கட்சி உறுப்பினரான கம்ஸி குணரத்னத்தினால் இச்சிறப்பு இடையீட்டு விவாதத்துக்கான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதுடன், இவ்விவாதத்தில் நோர்வே வெளிவிவகார அமைச்சரும் உரையாற்றவுள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, அவற்றின் ஊடாகப் புதிய அரசாங்கம் தெரிவாகி ஒரு வருடம் கடந்திருப்பதுடன் இக்காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச தரப்புக்களால் பல்வேறு எதிர்பார்ப்புக்கள் வெளியிடப்பட்ட பின்னணியில், இலங்கையின் தற்போதைய அரசியல் நகர்வு குறித்து இவ்விவாதத்தின்போது கேள்விகள் எழுப்பப்படவுள்ளன.
அதேபோன்று இவ்விவாதத்தில் குறிப்பாக ஆட்சியியல் நிர்வாகம், ஜனநாயக மறுசீரமைப்புக்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகிய விடயங்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம், சமகால மனித உரிமைகள் நிலைவரம், இன மற்றும் மத சிறுபான்மையினரைப் பாதிக்கும் விவகாரங்கள், இராணுவமயமாக்கல், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன தொடர்பில் நிலவும் கரிசனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் கம்ஸி குணரத்னம், ‘அண்மையகாலங்களில் இலங்கை பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கிறது. அதன்படி ஜனநாயகக்கோட்பாடுகள், மனித உரிமைகள் மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இதுபற்றிய சர்வதேச கலந்துரையாடல் ஒன்றை உருவாக்குவதே இச்சிறப்பு இடையீட்டு விவாதத்தின் நோக்கமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.
![]()
