மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டதாகவும், குறித்த பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டதாகவும், குறித்த பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதகுறித்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழியொன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.பிரதீபனின் மேற்பார்வையின் கீழ் கடந்த மார்ச் 30ஆம் திகதி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அப்பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டது.
அந்த மண்ணின் தன்மை மற்றும் நீர் இருப்பு என்பவற்றின் காரணமாக அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதில் தொழில்நுட்ப ரீதியான சிரமங்கள் காணப்பட்ட போதிலும், தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி அப்பகுதி ஆய்வு செய்யப்பட்டது.
அத்தொழில்நுட்பக் குழுவில் தடயவியல் மற்றும் மானுடவியல் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்ற இட ஆய்வு அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
அதேவேளை எமது அலுவலக அதிகாரிகள் இந்த வழக்கைக் கண்காணித்து வருவதுடன், மூன்று நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளிலும் முன்னிலை வகித்தனர்.
அத்தோடு முதல் நாள் அகழ்வின்போது தமது அன்புக்குரியவர்கள் அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் 50 பேர் வரை வருகைதந்திருந்தனர்.
2014 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குருக்கள்மடம் பகுதியில் மனிதப்புதைகுழி இருக்கக்கூடும் என அடையாளப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சாட்சியாளர் ஒருவரால் அடையாளம் காண்பிக்கப்பட்ட குறித்த இடங்கள், 2015 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் ஊடாக தரை ஊடுருவல் ரேடார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அந்த முடிவுகளின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
![]()
